Friday, January 31, 2014

ஹரியும் சிவனும் ஒன்று!! - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன்.  அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும். 

அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.


புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை.  எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு   சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!

 

முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.


மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.


பலவாறு முயற்சிச் செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சிச் செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த  ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்ச்னை மைந்தன் ஆஞ்சினேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.


ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.


நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.

கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,


ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.

சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. 

இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான். 
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. 


ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.




நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு. 

நான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.

அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.



எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?

இனி, அடுத்த வாரம் வேற ஊர் கோவில் பத்திப் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்.

27 comments:

  1. அற்புதமான கோவில்.தமிழ்நாட்டு கோவில்களை சுத்தமாக வைத்துஇருக்க மாட்டார்கள்.கேரளாவில் ஒவ்வொரு கோவிலும் அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் சுபா! அதனாலயே நம் கோவில்களின் அழகு கெட்டுப் போகுது.

      Delete
  2. அடேங்கப்பா...! எத்தனை தகவல்கள்... அருமையான படங்கள்... நல்லாவே சுத்திப் பாத்தாச்சி சகோதரி... நன்றி... உங்களின் வேண்டுதல் நிறைவேறியதற்கும் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  3. யக்கா., உங்க பதிவலா எங்களுக்கும் புண்ணியம் கிடைச்சிடுச்சு...

    ReplyDelete
    Replies
    1. ய்ங்களுக்கு புண்ணியம் சேர்த்து எனக்கும் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது

      Delete
  4. அரிய பல தகவல்களை அருமையான படங்களுடன் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டி கருத்திட்டமைக்கும் நன்றிங்க சகோ!

      Delete
  5. அற்புதமான படங்களுடன்
    அருமையான விளக்கங்களுடன்
    பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டி கருத்திட்டமைக்கும் நன்றிங்கப்பா!

      Delete
  6. //இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பினான்//உண்மையில் இந்த ஊர்களில் குற்றங்கள் குறைவாக நடபதர்க்கு இங்குள்ள மக்களின் சாத்வீக குணமும் ஒரு காரணமாக இருக்கலாம் உங்கள் பதிவின் மூலம் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டோம் ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டி கருத்திட்டமைக்கும் நன்றிங்க

      Delete
  7. புண்ணியக்கணக்கு ஏறிக்கொண்டே போகிறது!

    ReplyDelete
    Replies
    1. புண்ணியக்கணக்கை ஏற்றி விட்டதுக்கு நன்றி ஐயா!

      Delete
  8. உங்க ஊர் கோவிலை உங்க ஊருக்கு கூப்பிடாமைலே சுத்திக் காமிச்சதுக்கு நன்றி.

    "அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு”//" - அப்பு நோட் தி பாயிண்ட் !!!!!!

    ReplyDelete
    Replies
    1. போட்டுக்கொடுக்காதீங்க சகோ! அவன் என்னைப் போட்டுத்தள்ளிடுவான்

      Delete
  9. எங்கள் ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திய விஐயநகரம் கோயிலின் புண்ணியம் தேடிஒரு பயணம் மூலம் அரியும் சிவனும் ஒன்றாக உள்ள இருகோயிலன் வரலாறினை அருமையாக படங்களுடன் தொகுத்து தந்தது சிறப்பாக இருந்தது நன்றி

    ReplyDelete
  10. எங்கள் ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திய விஐயநகரம் கோயிலின் புண்ணியம் தேடிஒரு பயணம் மூலம் அரியும் சிவனும் ஒன்றாக உள்ள இருகோயிலன் வரலாறினை அருமையாக படங்களுடன் தொகுத்து தந்தது சிறப்பாக இருந்தது நன்றி

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! எந்த ஊருங்க நீங்க!?

      Delete
  11. படங்கள் அத்தனையும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

      Delete
  12. அருமையான கோவில்! அழகாய் சுற்றி காண்பித்தமைக்கு நன்றி! எங்க ஊரு கோவிலுக்கும் வாங்க! செவ்வாய்க்கிழமை 4-2-14 அன்று திருப்பாவாடை உற்சவம் நடக்குது!

    ReplyDelete
  13. அழகான கோவில். தலவரலாறு அருமை. படங்களுடன் பதிவிட்டு நேரில் பார்த்த அனுபவத்தைத் தந்துட்டீங்க. நன்றி ராஜி.

    ReplyDelete
  14. அருமையான படங்கள். கோயில்தர்சனம் கிடைத்து மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு. உங்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் பங்களித்தமைக்கு நன்றி.

    ReplyDelete