Monday, January 13, 2014

போக்கியா!? போகியா!?

பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரங்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது. 

அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இப்பண்டிகையின் தத்துவமாகும்.
 பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம்  பிசியா இருப்பாங்க.
பொட்டு பொடுசுங்கலாம் என்ன துணி வாங்கலாம், அதை எந்த மாடல்ல எங்க தைக்க குடுக்கலாம்ன்னு பிளான் பண்ணும்ங்க. பொம்பளை பிள்ளைங்கள்லாம் கோலம் போட்டு பழகுறது, மருதாணி கிள்ளி வந்து அரைச்சு வைக்குறதுன்னும் இருப்பாங்க. ஆம்பிளை பசங்க கபடி, கிரிக்கெட், சைக்கிள் போட்டிலாம் எங்கே வைக்கலாம். எந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது? எந்த ஷோ போலாம்?! பாலாபிஷேகம் பண்ண அப்பா சட்டைல இருந்து காச ஆட்டையைப் போடுறது எப்படி!? என்ன பொய் சொல்லி செகண்ட் ஷோ சினிமாக்கு போறதுன்னு பிளான் பண்ணுவாங்க. 

போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம். பின்பு, வீட்டை சுத்தம் பண்ணும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி உபத்திரவம் கொடுப்பேன். பரணை மேல் ஏறி வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எலி, கரப்பான் பூச்சி, தேள், பூரான் குடும்பத்தைலாம் வம்படியா காலி பண்ணி அதுங்க சாபத்தை வாங்கிக் கட்டிக்குவேன்.
                 
 3 மாசத்துக்கு முன்னாடி காணாமல் போன அப்பாவின் பல்துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சு குடுத்துட்டு, அப்பாவின் செண்டிமெண்ட் பேனாவை எங்கேயோக் காணாம போக்குறதும், கேஸ் அடுப்பை கழுவுறேன்னு, நல்லா எரியுற அடுப்பை ரிப்பேர் ஆக்குறது, லைட்லாம் தொடைக்குறேன்னு போட்டு உடைக்குறதும் எனக்கு கைவந்த கலை. அதுக்காக அப்பா அடிக்க துரத்த, பக்கத்துவீட்டு ஃபாத்திமா மாமி வீட்டுல தஞ்சம் புகுவதும் பதிவுல சொல்லக்கூடாதக் கதை.

ராத்திரி சாப்பாட்டை முடிச்சுட்டு, வாசல் தெளிச்சு, கோலம் வந்துக்கிட்டே கோலம் போட்டு, கல்ர் கொடுத்து முடிச்சு, கைக்கு தொப்பி மருதாணி வச்சுக்கிட்டு தெரு முழுக்க ரவுண்ட்ஸ் வருவோம். யார் வீட்டு கோலம் நல்லா இருக்குன்னு பார்க்க.., எப்படியும் என்னைவிட மத்தவங்க நல்லாதான் கோலம் போட்டிருப்பாங்க. இருந்தாலும் நான் போட்ட கோலம்தான் நல்லா இருக்குன்னு என்னை நானே தேத்திக்கிட்டு படுக்க போவேன். அப்பதானே சீக்கிரம் எழுந்து பொங்கல் வேலைகளை பார்க்க முடியும்!! அதாவது அம்மா பொங்கல் வேலைகல்ளைப் பார்க்க..., நான் டிவி பார்க்க முடியும்!?

13 comments:

  1. போகிப் பண்டிகை நினைவுகள் சூப்பரா இருந்தது..

    அப்பல்லாம் அப்படித் தான் இருந்திருக்கோம்..:))

    எலி சாபத்தை வாங்கிகட்டிக்குவேன்... ரோஷ்ணி படித்து சிரித்துக் கொண்டாள்...:))

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. எங்க வீட்டுலதான் என் பொழப்பு சிரிப்பா சிரிக்குதுன்னா, அங்கயுமா!?

    ReplyDelete
  3. பொங்கல் நல்வாழ்த்துகள் அக்கா.கரும்பு வாங்கியாச்சா அக்கா.பாவம் எலி,கரப்பான் எல்லாம்.நாங்களும் கோலம் போட்டதும் அடுத்தவர் கோலத்தை பார்க்க போவோம்

    ReplyDelete
  4. // மனதில் இருக்கும் தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இப்பண்டிகையின் தத்துவமாகும்... // உண்மை சகோதரி... பாராட்டுக்கள்...

    தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  5. அட! போகிப் பண்டிகைக்கு இப்படி ஒரு அர்த்தமா!!!!.

    அதானே நீங்களாவது டி‌வி பார்க்காம இருக்கிறதாவது!! சரி, அது அம்மா வீட்டில். உங்கள் வீட்டில்???????????????

    ReplyDelete
  6. மலரும் நினைவுகளையும் அழகாக சொல்லிட்டீங்க வாழ்த்துகள் உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும்....

    ReplyDelete
  7. வணக்கம் சகோ
    மிக அழகாக நிகழ்வைத் தொகுத்து பதிவாகத் தந்து அசத்தி விட்டீர்கள்.
    --------
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete

  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. நல்ல சுவையான பொங்கல் "போகிப் பதிவு"!! வாழ்த்துக்கள்!!

    துளசிதரன்,கீதா

    ReplyDelete
  10. போகிப் பண்டிகை நினைவுகள் அருமை...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  11. சுவையான போகி நினைவுகள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    ReplyDelete